Friday, November 10, 2006

கமல்ஹாசனின் சொந்தப் பிரச்சனை

என் நண்பனின் வீடு.

எல்லோரும் டி.வி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.டி.வியில் ஏதோ திரைப்படத் துறையினரின் விழாவை காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.முக்கிய நடிகர்கள்,இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் என்று ஒரே கூட்டம்....அவ்வப்போது காமிரா, கூட்டத்தில் அமர்ந்திருப்போரையும் காண்பிக்கிறது.என் நண்பனின் தங்கை ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லிக்கொண்டே வருகிறாள்.

இந்த முறை காமிரா கமல்ஹாசனை காண்பிக்கிறது.அருகில் அமர்ந்திருக்கும் கெளதமியையும் காண்பிக்கிறது.உடன் அந்த இருவரின் குழந்தைகளையும் காண்பிக்கிறது.அந்த காட்சியை ஒருவித குறுகுறுப்புடன் எல்லோரும் பார்க்கிறார்கள்.அப்போது என் நண்பனின் அப்பா கேட்கிறார்" இந்தப் பெண் யார்?" என்று.அவர் கேட்டது கெளதமியை குறித்து.என் நண்பன் திடுக்கிட்டு"கூட நடிக்கிற பொண்ணு" என்று தடுமாறி கூறினான்.

ஆனால் அவனுடைய தங்கை, கமல்-கெளதமி குறித்த முழுக் கதையையும் அவிழ்த்து விட்டுவிட்டாள்.நண்பன் டென்சனாகி " போடி உள்ளே" என்று கத்தினான்.அவளும் பதில் சண்டைக்கு தயாராகி இருவரும் உள்ளே சென்றார்கள்.அவ்வளவாக சினிமா தெரியாத அந்த அப்பா அதிர்ந்து விட்டார்."இருவரையும் விட்டுவிட்டு மூன்றாவதாக இவளை சேர்த்துக்கொண்டானா? அதுவும் ஒரு குழந்தையோட.." என்று என்னிடம் கேட்டார்.நான் மய்யமாக தலையசைத்தேன்.அப்போது வந்த நண்பன் "அப்பா அதெல்லாம் அவங்களோட சொந்த விசயம்...அவங்களோட நடிப்பை மட்டும் தான் நாம பார்க்கனும்" என்று சற்று உரத்தகுரலில் கூறினான். அப்பா அமைதியாக சற்று நேரம் டி.வி பார்த்தார்.

பிறகு என்னிடம் திரும்பி "அது அவுங்க சொந்த விசயம்தான்...ஆனா இந்த உறவுகளை பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியாத அவர்களின் குழந்தைகளின் மனநிலை எப்பிடியிருக்கும்? இவர்களை பற்றிய செய்திகளை பத்திரிக்கையில் படிக்கும் நம் வீட்டு குழந்தைகளின் ஒழுக்கம் பற்றிய சிந்தனை என்னவாக இருக்கும்?...இதை எப்பிடி அவர்களின் சொந்த பிரச்சனை என்று கூறமுடியும்?" கேட்டார்.

உடனே என் நண்பன் இடைமறித்து "உனக்கு டயமாகுது.கிளம்பு.." என்றான்.

Thursday, November 02, 2006

சப்னா ஆஸ்மியும் VS டெல்லி இமாம் புகாரி

“பெண்கள் தங்கள் முகத்தை துணியால் மூடியிருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை”- நடிகை சப்னா ஆஸ்மி

“இஸ்லாத்திற்கு விளக்கம் கொடுக்க யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது? அவர் அடுத்தவர்களை மகிழ்ச்சி படுத்துபவர் …ஆடுவதும் பாடுவதும் மட்டும் தான் அவர் வேலை..அந்த வேலையை மட்டும் அவர் பார்க்கவும். முஸ்லீம் பெண்களை திசை மாற்றும் உரிமை அவருக்கு கிடையாது”- டெல்லி இமாம் புகாரி

“பர்தா அணிவது கட்டாயமில்லை…ஆபாசமில்லாமல் உடலை நல்லமுறையில் மூடியிருக்கவேண்டும் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது.பர்தா அணியாத பெண்களை மதத் தலைவர்கள் கண்டபடி தாக்கக்கூடாது. தனக்கு பிடித்த வேலையை தேர்ந்தெடுக்கும் உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு.இமாம் புகாரியின் வார்த்தைகள் அவமானகரமானது.ஒரு பெண்ணை இப்படி மரியாதையில்லாமல் பேசுவதற்கு அவருக்கு உரிமையில்லை”- சைஸ்தா அம்பர்,தலைவர்,அகில இந்திய முஸ்லீம் பெண்கள் சட்ட வாரியம்.

“தனிமனித தாக்குதலில் எனக்கு ஆர்வம் இல்லாததால் புகாரி சொல்லுவதை பற்றி நான் கொஞ்சமும் கவலை படவில்லை.பெரிய விசயங்களில் ஆர்வம் காட்டவே விரும்புகிறேன்” சப்னா ஆஸ்மி

Wednesday, November 01, 2006

Slum Tourism

டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு வெளிநாட்டினர் நிறைய வருவதுண்டு. அவர்களுக்கு அங்கு வாழும் ஏழைமக்களின் வாழும்முறையும், குடிசை பகுதிகளும் Slum Tourism என்ற பெயரில் சில சுற்றுலா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் காண்பிக்கபடுகின்றன. இதற்காக ஒரு தொகையும் அவர்களிடம் வசூலிக்கப்படுகிறது. கேட்டால் இந்த பணம் அந்த குடிசைபகுதி மக்களின் நல்வாழ்வுக்காக செலவிடப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

பார்க்க:

http://www.zeenews.com/znnew/articles.asp?rep=2&aid=301647&sid=ZNS


இது எந்த வழியில் சரியானது?

வணக்கம்

எழுதுவதின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை...எழுதும் உந்துதல் இருப்பது தெரிகிறது.